சுருக்கமான காலை வழிபாடு
என் இறைவா,
உம்மை நான் வணங்கித் தொழுகிறேன்.
என் முழு மனதோடு உம்மை அன்பு செய்கிறேன்.
என்னைப் படைத்துக் கிறிஸ்துவனாக்கிக் கடந்த
இரவில் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
இந்நாளின் செயல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
உமது திருவுளத்திற்கு ஏற்றவாறு அடியேன் நடக்க அருள் புரிவீராக.
உம் மேன்மைக்காக என்னைப் பாவத்திலிருந்தும் ஒவ்வொரு
தீமையிலிருந்தும் காப்பீராக. என்னிடமும் என் அன்புக்குரிய
அனைவரிடமும் உம் திருவருள் இருப்பதாக. ஆமென்.
விரிவான மாலை வழிபாடு-பரிசுத்த ஆவியை நோக்கி
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீ தனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இருதய ஒளியே வந்தருள்வீர்.
உன்னத ஆறுத லானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே,
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர்நிழலே,
அழுகையில் ஆறுத லானவரே,
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப் போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
காயப் பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.
இறைவா, உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்.
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
அழிவிலா இன்பம் அருள்வீரே.
ஆமென்.
Comments
Post a Comment